சென்னை : தமிழ் திரைப்பட இயக்குனர் பாரதிராஜாவுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்க கவிஞர் வைரமுத்து வலியுறுத்தி உள்ளார். தாதா சாகேப் பால்கே விருது, இந்தியத் திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்காக இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதாகும். இவ்விருது, இந்திய திரைப்படத்துறையின் தந்தை எனக்கருதப்படும் தாதாசாகெப் பால்கே அவர்களின் பிறந்த நாள் நூற்றாண்டான 1969ம் ஆண்டு நிறுவப்பட்டது. கடந்த ஆண்டு திரைப்படத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் அமிதாப்பச்சன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டு தமிழ் திரைப்பட இயக்குனர் பாரதிராஜாவுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்க வேண்டும் கவிஞர் வைரமுத்து தனது கவிதை மூலம் பரிந்துரைத்துள்ளார்.
இது தொடர்பார் கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
மண்ணின்
இருதயத்தை...
கல்லின்
கண்ணீரை...
அரிவாளின்
அழகியலை...
சரளைகளின்
சரளி வரிசையை...
பாவப்பட்ட தெய்வங்களை...
ஊனப்பட்டோர் உளவியலை...
கலாசாரப்
புதை படிவங்களைக்
கலையாத கலைசெய்த
பாரதிராஜாவை
தாதா சாகேப்
பால்கே விருதுக்குப்
பரிந்துரைக்கிறோம்.
நீங்களும்... எனத் தெரிவித்துள்ளார்.