×

திருமுல்லைவாயலில் 3 ஊழியர்களுக்கு தொற்று: ஓட்டலுக்கு அதிகாரிகள் சீல்

ஆவடி: ஆவடி மாநகராட்சியில், நேற்று வரை 1200க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 45 பேர் பலியாகி உள்ளனர். இதனையடுத்து, மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் தீவிர தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல், சி.டி.எச் சாலை, போக்குவரத்து சிக்னல் அருகே தனியார் ஓட்டல் உள்ளது. இங்கு 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இந்த ஓட்டலுக்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்து உணவுகளை வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில், ஓட்டலில் பணியாற்றிய ஒரு ஊழியருக்கு முதலில் தொற்று ஏற்பட்டது. இதனையடுத்து, சக ஊழியர்களுக்கும் சுகாதார அதிகாரிகள் பரிசோதனை செய்துள்ளனர்.

இதில், மேலும், இரு ஊழியர்களுக்கு தொற்று ஏற்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் 3 ஊழியர்கள் மீட்டு மதுரவாயலில் உள்ள தற்காலிக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், அதிகாரிகள் தொற்று ஏற்பட்ட ஒட்டலுக்கு கிருமி நாசினி தெளித்து சீல் வைத்தனர். மேலும், கடந்த சில தினங்களாக ஓட்டலுக்கு வந்து சென்ற வாடிக்கையாளர்கள் குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களைக் கண்டறிந்து பரிசோதனை செய்யவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். மேலும், தொற்று ஏற்பட்ட ஓட்டல் அருகில் உள்ள கூல்ரிங்ஸ் கடை, ஸ்வீட் கடை, காப்பிக்கடை ஆகியவையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Thirumullaivayal ,hotel , Thirumullaivayal, 3 staff, infection, hotel, officers sealed
× RELATED என் பெற்றோர்களே எனது வழிகாட்டிகள்!