சூளகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்துள்ள செட்டிப்பள்ளி கிராமத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் 3 யானைகள் கடந்த சில மாதங்களாக முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் இரவு நேரங்களில் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு சென்று பயிர்களை தின்றும் மிதித்தும் சேதப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயி களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த 3 யானைகளில் இருந்து பிரிந்த ஒற்றை யானை இன்று காலை 7 மணியளவில் காஷ்மீர்- கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையை கடந்து அட்டக் குறுக்கி கிராமத்திற்கு சென்றது.
இதனை பார்த்த கிராம மக்கள் இதுகுறித்து வனத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடம் விரைந்து வந்த வனவர் மகேந்திரன் தலைமையிலான குழுவினர் ஒற்றை யானையை போடூர் பள்ளத்திற்கு விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் காமந்தொட்டி, கோபசந்திரம் வழியாக சென்ற யானை மீண்டும் தேசிய நெடுஞ்சாலையை கடந்து பேரண்டப்பள்ளிக்கு சென்றது. காலை நேரம் என்பதால் இரண்டு முறை தேசிய நெடுஞ்சாலையை யானை கடந்தபோது அதிகளவில் வாகனங்கள் செல்லவில்லை. தற்போது யானை பேரண்டப்பள்ளியில் முகாமிட்டுள்ளது.
இதனால் கிராம மக்கள் வெளியே வராமல் இருக்க வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் யானை மீண்டும் தேசிய நெடுஞ்சாலையை கடக்கலாம் என்பதால் வாகன ஓட்டிகளும் எச்சரிக்கையுடன் செல்லும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.