திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 15 அர்ச்சகர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், தரிசனத்தை நிறுத்த வேண்டுமென பிரதான அர்ச்சகர் ரமண தீட்சிதர் கோரிக்கை விடுத்துள்ளார். திருப்பதியில் 50 அர்ச்சகர்களும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 15 அர்ச்சகர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருப்பதி கோவிலில் இதுவரை அர்ச்சகர் உட்பட 125 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் அவசர ஆலோசனை கூட்டமானது தேவஸ்தான தலைவர் சுப்பாரெட்டி தலைமையில் நடைபெற்றது. அப்போது அந்த ஆலோசனை கூட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட அர்ச்சகர்களை பக்தர்களுக்கு தொடர்பில்லாத இடங்களில் பணியாற்ற ஏற்பாடு செய்யப்படுவதாக கூறப்பட்டது. மேலும், வராக சுவாமி, ஆஞ்சநேய சுவாமி கோயில் உள்ளிட்ட இதர சன்னதிகளில் பூஜைகளில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதான அர்ச்சகர் ரமண தீட்சிதர் தனது டுவிட்டரில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் இதுவரை 15 அர்ச்சர்கர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால், கோவில் தரிசனத்தை உடனடியாக நிறுத்தக்கோரி முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், 50 பேருக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்ட நிலையில், 25 பேரின் முடிவுகள் இன்னும் வெளியிடவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், திருப்பதியில் தரிசனத்தை நிறுத்த தேவஸ்தான அதிகாரிகள் மறுப்பதாகவும் பிரதான அர்ச்சகர் ரமண தீட்சிதர் டுவிட்டரில் புகார் தெரிவித்துள்ளார். இந்த பதிவிற்கு தேவஸ்தான அதிகாரிகள் கடும் கண்டம் தெரிவித்துள்ளனர்.