சீர்காழி: சுருக்குமடி வலைகளை பயன்படுத்த அனுமதிக்கக்கோரி நாளை கடலில் இறங்கி உயிரை மாய்த்து கொள்ளும் போராட்டத்தை நடத்தப்போவதாக மீனவர்கள் அறிவித்துள்ளதால் சீர்காழியில் 5 மாவட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சுருக்குமடி வலையை பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கக்கூடாது என்று கூறி நாளை பழையார் முதல் கோடியக்கரை வரை அந்தந்த மீனவ கிராமங்களில் கடலில் குடும்பத்துடன் இறங்கி உயிரை மாயத்துக் கொள்ளும் போராட்டம் நடத்தப்போவதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
தங்களின் வாழ்வாதாரம் காக்கப்படும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் கண்டிப்பாக நாளை உயிரை மாய்த்துக்கொள்ளும் போராட்டம் நடைபெறும் என மீனவர்கள் அறிவித்தனர். இதனால் மீனவ கிராமங்களில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சீர்காழியில், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 5 மாவட்டங்களைச் சேர்ந்த 11 ஏ.டி.எஸ்.பிக்கள், 25 டி.எஸ்.பிக்கள், 46 இன்ஸ்பெக்டர்கள், 190 சப் இன்ஸ்பெக்டர்கள் என 1500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கலவரத்தை கட்டுப்படுத்தும் 2 வஜ்ரா வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. திருமுலைவாசல், பழியார், மடவாமேடு, பூம்புகார் உள்ளிட்ட 21 மீனவ கிராமங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கலவரத்தை தடுக்கும் வஜ்ரா வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன.