சேலம்: சேலத்தில் கொரோனா பாசிட்டிவ் வந்தவரை விட்டுவிட்டு, நெகட்டிவ் வந்த வாலிபருக்கு 2 நாட்களாக சிகிச்சை அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாநகரில் பிரபல ஆட்டோ மொபைல் ஷோரூம் செயல்பட்டு வருகிறது. கடந்த வாரம் 15 பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், ஓமலூரைச் சேர்ந்த வாலிபருக்கு கொரோனா தொற்று உறுதியானது. ஆனால், அவரின் பெயரை தவறுதலாக புரிந்து கொண்ட சுகாதாரத்துறையினர், அதே பெயருள்ள இரும்பாலையைச் சேர்ந்த, நெகட்டிவ் ரிசல்ட் வந்த வாலிபரை பிடித்து சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். அவரது வீடு மற்றும் அப்பகுதி முழுவதும்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதேசமயம்,கொரோனா பாசிட்டிவ் வந்த ஓமலூர் வாலிபர், கடந்த சில நாட்களாக ஹாயாக வெளியில் சுற்றி வந்துள்ளார். இதுகுறித்து சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவரை அழைத்து வந்து ஓமலூர் அரசு மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. உண்மை தெரிந்ததும் நெகட்டிவ் ரிசல்ட் வந்தவரை வீட்டுக்கு அனுப்பினர். பெயர் குழப்பத்தால், கொரோனா நோயாளியை வெளியே விட்டுவிட்டு, நெகட்டிவ் உள்ளவரை மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.