×

தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் பள்ளிகளை அமைத்து தமிழ் சமுதாயத்தை அறிவார்ந்த சமுதாயமாக உருவாக்கியவர் காமராஜர்: பிறந்த தினத்தையொட்டி முதல்வர் எடப்பாடி புகழாரம்

சென்னை:  தமிழ் சமுதாயத்தை படிப்பறிவு மிக்க அறிவார்ந்த சமுதாயமாக உருவாக்கியவர் காமராஜர் என்று அவரது பிறந்ததினத்தையொட்டி முதல்வர் எடப்பாடி புகழாரம் சூட்டியுள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: `தென்னாட்டு காந்தி’’, `படிக்காத மேதை’’, `கர்மவீரர்’’ என்று அன்போடு அழைக்கப்படும் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தினத்தை அரசு விழாவாக கொண்டாடும் இவ்வேளையில், அவரை பற்றி நினைவு கூர்வதை நான் பெருமையாக கருதுகிறேன். 1903ம் ஆண்டு ஜூலை மாதம் 15 நாள் பிறந்த காமராஜர், நாட்டுக்காக உழைப்பதையே தனது லட்சியம் என கொண்டிருந்தார். நமது தாய்நாட்டின் சுதந்திர போராட்டத்தில் தன்னை முழுமையாக அர்பணித்துக் கொண்டவர். திருமணமும் இல்லறமும் சமுதாய பணிக்கு தடையாக இருக்கும் என பிரம்மச்சாரியாகவே வாழ்ந்தவர்.

1954ம் ஆண்டில், அப்போதைய சென்னை மாநில முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், தமிழ்நாட்டின் பட்டித்தொட்டியெல்லாம் பள்ளிக்கூடங்களை அமைத்து, தமிழ் சமுதாயத்தை படிப்பறிவு மிக்க அறிவார்ந்த சமுதாயமாக உருவாக்கினார். பல தொழிற்சாலைகளை நிறுவி, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டவர். தமிழ்நாட்டில் பல அணைகளை கட்டிய பெருமைக்குரியவர். காமராஜரின் எளிமை, தமிழகத்தை மட்டுமல்ல, இந்தியாவை மட்டுமல்ல, உலகத்தையே வசீகரித்து இருக்கிறது. பெருந்தலைவர் காமராஜர் உடையில் மட்டுமல்ல, உணவில், பிறருடன் பழகுவதில், மேடை பேச்சு, இப்படி எல்லாவற்றிலும் அவருடைய ஒளி வீசியது என எம்ஜிஆர் பாராட்டி உள்ளார்.

எளிமைக்கும், நேர்மைக்கும் பெயர் பெற்ற பெருந்தலைவர், தனது பதவியைவிட தேச பணியே முக்கியம் என எப்போதும் நினைப்பவர். அதன் காரணமாகவே தனது முதலமைச்சர் பதவியையும் துறந்து நாட்டுக்காக பணியாற்றியவர். அகில இந்திய அளவிலும் தலைவர்களை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்தவர். இந்திய அரசின் உயரிய விருதான `பாரத ரத்னா’’ விருதினை பெற்றவர். தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கை தரத்தில் முன்னேற்றம், கல்வியில் முன்னேற்றம், தொழில் வளர்ச்சியில் முன்னேற்றம், நீர்வளத்தில் முன்னேற்றம் என தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தபோது அனைத்து துறைகளிலும் முத்திரையை பதித்த பெருந்தலைவர் காமராஜைர போன்று தமிழக அரசும் தமிழ்நாட்டை தொடர்ந்து முன்னேற்ற பாதையில் கொண்டு சென்று, பீடு நடைபோடும்.


Tags : Edappadi ,Kamaraj ,birthday ,occasion ,Birthdays ,Tamil Nadu , Tamil Nadu, Pattithotti, School Establishment, Tamil Society, Intellectual Society, Kamarajar, Chief Minister Edappadi, Praise
× RELATED பிரதமர் சர்ச்சைக்குரிய கருத்தை...