சென்னை : சென்னை தியாகராய நகரில் 30 நடமாடும் வாகனங்களின் இயக்கத்தை சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோர் தொடக்கி வைத்தனர். கொரோனா இல்லாத நகரத்தை உருவாக்கும் நோக்கத்தில் வீடுகளுக்கே சென்று கொரோனா பரிசோதனை செய்யும் வசதிகள் கொண்ட மருத்துவ வாகனங்கள் இயக்கப்பட உள்ளன. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கல் அதிகரித்து கொண்டே வருவதால் அதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.
இந்த நிலையில் இன்று நடமாடும் வாகனங்களின் இயக்கத்தை தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், மாவட்டங்களில் அதிக பரிசோதனை செய்யப்படுவதால் தொற்று அதிகமானதை போல தோற்றம் தெரிகிறது. அரசின் அறிவுரைகளை கடைப்பிடித்தால் 5 மாதங்களில் முழுமையாக கொரோனாவில் இருந்து மீள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 50,000க்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நடமாடும் மருத்துவ வாகனங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சிகிச்சைக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் உள்ளது. இதன் மூலம் வீடுகளுக்கே சென்று கொரோனா பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்க முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.