சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பள்ளிகள் திறக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இந்தநிலையில், 10ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், கல்வி தொலைக்காட்சியின் வாயிலாக திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரண்டரை மணிநேரம் சிறப்பு கல்வி நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பையும் மற்றும் பிற வகுப்புகளின் பாடங்களுக்கான ஒளிபரப்பினையும் முதல்வர் தொடங்கி வைத்தார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் திட்டத்தையும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று துவக்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 12ம் வகுப்பு மாணவர்கள் லேப்டாப்பில் கல்வி பயில மென் உருவிலான பாடங்களை உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் வாயிலாக தரவிறக்கம் செய்யும் திட்டத்தையும் முதல்வர் துவக்கி வைத்தார். மேலும், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 2020-21ம் கல்வியாண்டிற்கான கல்வி மற்றும் கற்பித்தல் ஆகியவற்றில் ஏற்படும் சிரமங்களை எதிர்கொள்ள தேவையான ஆலோசனைகள் வழங்கிட தமிழக அரசால் அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் அறிக்கையை, வல்லுநர் குழுவின் தலைவரான பள்ளி கல்வி ஆணையர் சிஜிதாமஸ் வைத்யன் முதல்வர் எடப்பாடியிடம் சமர்ப்பித்தார்.