சென்னை: கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த டாக்டர் சைமன் ஹெர்குலஸ் (56), கொரோனா தொற்றால் கடந்த ஏப்ரல் மாதம் உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய வேலங்காடு சுடுகாட்டுக்கு எடுத்து சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பலரை கைது செய்தனர். அதில் நிர்மலா என்ற நிம்மி உள்பட 14 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது. இதை எதிர்த்து நிர்மலா சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் அறிவுரைக்கழகத்தில் முறையீடு செய்தார்.
இந்த மனுவை விசாரித்த அறிவுரைக்கழகம், நிர்மலா மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தது. இதைத்தொடர்ந்து அவர் ஜாமீன் கோரி சென்னை செசன்ஸ் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஆர்.செல்வக்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரர் நிர்மலாவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும், விசாரணையின் போது சாட்சிகளை கலைக்கக்கூடாது என்றும், தலைமறைவாகக்கூடாது என்றும் நீதிபதி நிபந்தனை விதித்து உத்தரவிட்டார்.