சென்னை: இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கி இணைக்கப்பட்டாலும் காசோலை தொடர்பான சேவைகளை இரண்டு வங்கிகளிலும் பெற முடியவில்லை என வாடிக்கையாளர்கள் புகார் கூறியுள்ளனர். இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கி ஏப்ரல் 1 முதல் இணைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இரண்டு வங்கிகள் இணைக்கப்பட்டது முதல் காசோலை தொடர்பான பரிவர்த்தனை சேவைகள் துவங்கப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கி இணைக்கப்பட்டது முதல் அலகாபாத் வங்கியின் பெயர் பலகைகள் இந்தியன் வங்கியாக மாற்றப்பட்டன. பெயர் பலகை மட்டும் மாறி உள்ளதே தவிர அனைத்து சேவைகளையும் பெற முடியவில்லை. இந்தியன் வங்கியில் அலகாபாத் வங்கி காசோலையை கொடுத்தாலும் அலகாபாத் வங்கியில் இந்தியன் வங்கி காசோலையை கொடுத்தாலும் அதன் மீது பரிவர்த்தனை மேற்கொள்ள மறுக்கின்றனர். மென்பொருள் இணைக்கப்படவில்லை; சர்வர் இணைக்கப்படவில்லை எனகூறி திருப்பி அனுப்புகின்றனர். எனவே விரைவில் அனைத்து சேவைகளும் வழங்க வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வங்கி வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.