டெல்லி: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் பிப்ரவரி 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வும், மார்ச் 10ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளும் நடைபெற்றது. சில பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்ற போதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சில தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து, ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு அகமதிப்பீடு, செயல்முறை தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண் வழங்க கடந்த மாதம் 26ம் தேதி உச்சநீதிமன்றம் அனுமதியளித்தது.
இதனால் மாணவர்களின் மதிப்பெண்களை கணக்கீடும் பணியில் சிபிஎஸ்இ ஈடுபட்டு வந்தது. சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஆன்லைனின் மூலம் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்துக்கொள்ளலாம் என்று அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.