பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே பாசன கிணற்றில் விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழந்தது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெரம்பலூர் அருகே செல்லியம்பாளையம் கிராமத்தில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். கிராமத்தில் அவருக்கு சொந்தமான கிணறு ஒன்று உள்ளது. அதனால், கிணற்றை தூர்வாரும் பணியானது கடந்த 2 வாரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கிராமத்தில் உள்ள ஆட்கள் பணிகளை செய்து வந்தனர். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மற்றும் பாஸ்கர் ஆகிய இருவரும் கிணற்றில் இறங்கி பக்கவாட்டில் துளையிட்டு தண்ணீர் வருகிறதா? என பரிசோதித்து பார்த்துள்ளனர். அப்போது வெகுநேரமாகியும் இவருவரையும் காணவில்லை. இதனால் சந்தேகமடைந்த கிராம மக்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ராஜ்குமார் உள்ளிட்ட 3 தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முதலில் பாஸ்கர் என்பவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். பின்னர், விஷவாயு தாக்கி உயிரிழந்த ராதாகிருஷ்ணனை கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டனர். மேலும், அவரை மீட்க சென்ற தீயணைப்பு வீரர் ராஜ்குமாரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில், செல்லியம்பாளையம் கிராமத்தில் பாசன கிணற்றில் விஷ வாயு தாக்கி தீயணைப்பு வீரர் உள்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, பாசன கிணற்றில் பக்கவாட்டில் துளையிட்டு போர் போடுவதற்கு முறையான அனுமதி பெறவில்லை என புகார் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில், பாசன கிணற்றில் துளையிட்டு வெடி மருந்து பயன்படுத்திய புகாரில் நில உரிமையாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.