×

விமானத்தில் பயணிக்கும் பயணிகளுக்கான விதிமுறைகளை தளர்த்தியது மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம்

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், விமானத்தில் பயணிக்கும் பயணிகளுக்கான விதிமுறைகளைத் தளர்த்தி மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. விமானப் பயணத்துக்கு வரும் பயணிகள் தங்கள் சுயவிவரப் படிவத்தில் 3 வாரங்களாக கொரோனாவில் பாதிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டிருந்தால் அவர்களைப் பயணிக்க அனுமதிக்கலாம் என்று தளர்த்தியுள்ளது.

இதற்கு முன் கடந்த மே 21-ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில் விமானத்தில் பயணிக்கும் அனைத்துப் பயணிகளும் கண்டிப்பாக சுயவிவரப் படிவத்தை நிரப்பிக் கொடுக்க வேண்டும், அதில் கடந்த 2 மாதங்களாக கொரோனாவில் பாதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கும் பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்திருந்தது. தற்போது அதை 3 வாரங்களாகக் குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் கொரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 8.50 லட்சத்தைக் கடந்துள்ளது. ஏறக்குறைய குணமடைவோர் 63 சதவீதமாக அதிகரித்துள்ளதையடுத்து விதிகளைத் தளர்த்தியுள்ளது.

இதுகுறித்து விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சக அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், “இந்தியாவில் ஏராளமான மக்கள் கொரோனாவிலிருந்து நாள்தோறும் குணமடைந்து வருகின்றனர். அவர்கள் விமானத்தில் பயணிக்க வரும்போது சிரமங்களைக் குறைக்கும் வகையில் சுயவிவரப் படிவத்தின் விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சான்று, குணமடைந்த சான்று ஆகியவற்றை விமான நிறுவனத்திடம் காண்பிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags : Federal Ministry of Civil Aviation ,passengers ,Corona , Corona, aviation
× RELATED செங்கல்பட்டு புறவழிச்சாலையில் லாரி...