×

இருவேறு விபத்தில் 2 பேர் பரிதாப பலி

பூந்தமல்லி: ஆவடி, கண்ணப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் இளையராஜா (28). இவர், ஆன்லைனில் உணவு விநியோகம் செய்யும் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். பூந்தமல்லி நெடுஞ்சாலை, திருவேற்காடு அடுத்த பள்ளிகுப்பம் பகுதியில் வந்தபோது, திடீரென  பைக் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் இளையராஜாவின் தலையில்  பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து காயமடைந்த இளையராஜாவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

மற்றொரு சம்பவம்:
ஆவடி, ஆனந்தன் நகர், காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் தமயன் (69). இவர் இரவு நேரங்களில் இருசக்கர வாகனத்தில் டீ விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் காலை வியாபாரம் முடிந்து வானகரம் மீன் மார்க்கெட்டில் மீன் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். திருவேற்காடு அடுத்த காடுவெட்டி அருகே சென்றபோது, சாலையில் இருந்த தடுப்பு சுவரில் மோதி கீழே விழுந்தார். அதில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கினார். பின்னர் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி தமயன் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார். பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.   


Tags : Two , Two different, in an accident, 2 people, killed
× RELATED அரும்பாக்கம் பகுதியில் குட்கா...