×

கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காமராஜர் பிறந்தநாளை கொண்டாட வேண்டும்: ஜி.கே.வாசன் வேண்டுகோள்

சென்னை : காமராஜர் பிறந்தநாளை கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கொண்டாட வேண்டும் என ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: பொதுவாழ்வில் தூய்மையும், அரசியலில் நேர்மையும், உழைப்பில் உண்மையும் கொண்டு விளங்கிய காமராஜரின் பிறந்தநாள் ஜூலை 15ம் தேதி வருகிறது. அவரது பிறந்தநாளை தமிழ் மாநில காங்கிரஸ் ஆண்டுதோறும் வெகுசிறப்பாக கொண்டாடி வருகிறது. இந்த வருடம் உலகம் முழுவதும் கொடிய நோயான கொரோனாவின் பிடியில் சிக்குண்டு இருக்கும் இந்த காலத்தில், காமராஜர் பிறந்தநாளை ‘கொரோனா நோய்க்கான விழிப்புணர்வு’ ஏற்படுத்தும் விதமாக தமாகாவினர் கொண்டாட வேண்டும்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் இணைந்து, அந்தந்த மாவட்ட தலைநகரிலும், வட்டார, நகர, கிராமங்கள்தோறும் கொண்டாடவும், தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா நோயிலிருந்து நம்மை காக்கும் கட்டுப்பாடுகளையும், கோட்பாடுகளையும் சமூக இடைவெளியையும் கடைபிடித்தும், முகக்கவசம் அணிந்தும், அவரது பிறந்தநாளில் அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்தும், கொரோனா நோயை ஒழிக்கும் விதமான விழிப்புணர்வு வாசகங்களை தாங்கிய பதாகைகளை ஏந்தி, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : birthday ,GK Vasan ,Corona ,Kamaraj , Corona Awareness, Kamaraj's Birthday, GK Vasan
× RELATED தூத்துக்குடி தமாகா வேட்பாளர் நாளை...