×

கால்வாய் கழிவை வீட்டின் அருகே கொட்டும் தகராறு டிராவல்ஸ் ஏஜென்ட் கொலை: 5 பேருக்கு வலை

ஆலந்தூர்: ஆலந்தூர் அருகே கால்வாய் கழிவை வீட்டின் அருகே கொட்டும் தகராறில் டிராவல்ஸ் ஏஜென்ட் வெட்டி கொலை செய்யப்பட்டார். ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகர் 4வது தெருவை சேர்ந்தவர் செல்வம் (50), தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் புக்கிங் ஏஜென்ட்டாக வேலை செய்து வந்தார். இவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த அஞ்சலி என்பவருக்கும் கால்வாய் கழிவுகளை வீட்டின் அருகே கொட்டுவது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதுபற்றி அஞ்சலி தனது மகன் குட்டி (எ) குறளரசன் (22) என்பவரிடம் தெரிவித்துள்ளார். அதன்பேரில் இவர், செல்வத்தை கண்டித்துள்ளார். இதனால், இருதரப்பினருக்கும் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு செல்வம் தனது வீட்டின் வெளியே அமர்ந்து இருந்தார். அப்போது, தனது நண்பர்களுடன் அங்கு வந்த குறளரசன், செல்வத்திடம் தகராறில் ஈடுபட்டு, மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினார்.  பலத்த காயமடைந்த அவரை, உறவினர்கள் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர்கள், செல்வம் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, தப்பியோடிய குறலரசன் உள்பட 5 பேரை தேடி வருகின்றனர்.


Tags : house Travel agent , Canal waste, travels, agent murder
× RELATED மாமல்லபுரம் அருகே ₹4,276.44 கோடியில்...