திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில், கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக வெயில் வாட்டி எடுத்து வந்தது. பகல் நேரங்களில் வெயில் புழுக்கம் தாங்க முடியாமல் மக்கள் வீடுகளில் முடங்கினர். ஆண்டுதோறும் வெயில் கொளுத்தும் நேரங்களில், அவ்வப்போது கோடை மழை, தலை காட்டி வெயில் உக்கிரத்தை தணிக்கும். தற்போது, 100 டிகிரிக்கு மேல் வெயில் சுட்டெரிக்கும் சூழ்நிலையில், மழையில்லாமல் மக்கள் வெயிலில் அவதிப்பட்டு வந்தனர். இதனால், பகல் மற்றும் இரவு நேரங்களில் வெப்பத்தின் உக்கிரத்தை தாங்க முடியாமல் தவித்தனர். இரவு நேரங்களில் அடிக்கடி ஏற்படும் அறிவிக்கப்படாத மின்தடையால் பொதுமக்கள் தவித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் இருண்ட வானிலையுடன் மழைக்கான அறிகுறிகள் தென்பட்டது. திடீரென காற்றுடன் பருவ மழை பலமாக பெய்தது. தொடர்ந்து பெய்த மழையால் சுட்டெரித்த வெயிலின் தாக்கம் குறைந்து, நகர மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மாவட்டத்தில் தொடர்ந்து பருவமழை ஏமாற்றி வருவதால், நிலத்தடி நீர் மட்டம் அதலபாதாளத்தில் சென்று கொண்டிருக்கிறது. இதன் காரணமாக குடிநீர் பிரச்னை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. வரும் நாட்களில் கோடை மழை தொடர்ந்து கைகொடுத்தால் மட்டுமே வெயில் உக்கிரத்தில் இருந்து மக்கள் தப்பிக்கவும், நிலத்தடி நீர் மட்ட சரிவை சமாளிக்கும் நிலை ஏற்படும். மேலும், விவசாயிகளும் வரும் ஆடிப் பருவத்தில் ஏதாவது பயிரிடலாம்.
மழையளவு விபரம் (மி.மீட்டரில்)
ஆர்.கே.பேட்டை 100
திருத்தணி 96
பள்ளிப்பட்டு 94
செம்பரம்பாக்கம் 91
பூண்டி 40
பூந்தமல்லி 40
திருவாலங்காடு 34
மழையளவு விபரம் (மி.மீட்டரில்)
ஜமீன்கொரட்டூர் 34
திருவள்ளூர் 27
ஊத்துக்கோட்டை 27
பொன்னேரி 19
கும்மிடிப்பூண்டி 10
செங்குன்றம் 9
சோழவரம் 4