×

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு, மே மாதத்திற்கான சம்பளத்தை வழங்குவதுடன், பணி நிரந்தரம் செய்ய வேண்டும்! : அரசுக்கு சீமான் கோரிக்கை

சென்னை : அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு, மே மாதத்திற்கான சம்பளத்தை வழங்குவதுடன், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்கள், பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை இதுவரை தமிழக அரசு நிறைவேற்றாதது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி ஆகிய பாடங்களைக் கற்றுத் தருவதற்காக அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். கடந்த 11.11.2011 அன்று தமிழக அரசு பிறப்பித்த ஆணை 177-ன் படி வேலைவாய்ப்பகப் பதிவு மூப்பு அடிப்படையில் நேர்காணல் மூலம் பணியமர்த்தப்பட்ட இவர்களுக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் என்ற முறையில் குறைந்தபட்சம் வாரத்திற்கு 3 அரை நாட்கள் மட்டும் பணியாற்றினால் போதுமானது என்றும் இதற்காக இவர்களுக்கு மாதம் ரூ.5,000 தொகுப்பூதியம் வழங்கப்படும் என்றும் அப்போதைய முதல்வர் அம்மையார் ஜெயலலிதா அறிவித்தார். கடந்த பத்தாண்டுகளில் ரூ 2500 மட்டுமே உயர்த்தப்பட்டு, தற்போது ரூ 7,500 சம்பளமாக வழங்கப்பட்டுவருகிறது.
பகுதி நேரமாக இருந்தாலும் கூட, ஒரு சில ஆண்டுகளுக்குப் பிறகாவது தங்களுக்குப் பணி நிரந்தரம் செய்யப்படும் என்ற நம்பிக்கையில் தான் அவர்கள் இந்தப் பணியில் சேர்ந்தனர். ஆனால் 9 ஆண்டுகள் முடிந்து 10வது கல்வியாண்டு தொடங்கும் போதிலும் கூட அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. இதனை வலியுறுத்தி ஒவ்வொரு ஆண்டும் அறவழியில் போராட்டம் நடத்தும்போதும், அதிகாரிகளால் விரைவில் பணிநிரந்தரம் செய்யப்படுவீர்கள் என்று உறுதியளிக்கப்படுவதும் பின் அந்த உறுதிமொழி காற்றில் பறக்கவிடப்படுவதும் வேதனையின் உச்சம்.

அதுமட்டுமின்றி, இவர்களைப் பணியமர்த்துவது தொடர்பான இரு அரசாணைகளில் இடம்பெற்றுள்ள அம்சங்களை நிறைவேற்றித் தருவதற்குகூட ஆட்சியாளர்கள் தயாராக இல்லை. தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்த 177-வது அரசாணைப்படி ஒரு பகுதிநேர ஆசிரியர் வாரத்திற்கு 3 அரைநாட்கள் வீதம் மாதத்திற்கு 12 அரை நாட்கள் மட்டும் பணி செய்தால் போதுமானது. இந்த வகையில் ஒவ்வொரு சிறப்பாசிரியரும் அதிகபட்சமாக 4 பள்ளிகளில் பணிபுரியலாம்; அதற்கான ஊதியத்தை அந்தந்த பள்ளிகளில் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இது நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் ஒவ்வொரு சிறப்பாசிரியருக்கும் மாதத்திற்கு அதிகபட்சமாக ரூ.30,000 வரை ஊதியம் கிடைத்திருக்கும். ஆனால், இதையும் தமிழக அரசு செயல்படுத்தவில்லை. பின்னர்ப் பிறப்பிக்கப்பட்ட 186-வது அரசாணைப்படி அதிகபட்சமாக இருபள்ளிகளில் பணியாற்றலாம் என்று விதிகள் திருத்தப்பட்டன. ஆனால், இந்த அறிவிப்பும் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இதற்குக் காரணம் அனைத்துப் பள்ளிகளிலும் ஆசிரியர்கள் தட்டுப்பாடு இருப்பதால், பகுதிநேர சிறப்பாசிரியர்கள், ஆசிரியர் இல்லாத வகுப்புகளைக் கவனித்துக் கொள்ளும்படி கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இவ்வாறாக இவர்களை முழுமையாக ஒரே பள்ளியில் பயன்படுத்திக் கொள்வதற்காகவே இவர்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் பணி தரப்படுவதில்லை. அதுமட்டுமின்றி, ஆண்டுக்கு 12 மாதங்களும் பணி வழங்கப்பட வேண்டும் என்று தமிழக அரசாணையில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், 11 மாதங்களுக்கான ஊதியம் மட்டும் தான் வழங்கப்பட்டுவருகிறது.

மேலும் உலகையே அச்சுறுத்தும் கொரோனா நோய்த்தொற்றுப் பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையிலும் கூட மே மாதத்திற்கான சம்பளத்தை வழங்காமல் தவிர்ப்பது பெருங்கொடுமை. தேசத்தின் வருங்கால சிற்பிகளை உருவாக்கும் உன்னதப் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை இனியும் வறுமையில் வாட விடாது, தமிழக அரசு உடனடியாக அனைத்து பகுதிநேர ஆசிரியர்களுக்கும் மே மாதத்திற்கான சம்பளத்தை வழங்க வேண்டும் எனவும், கடந்த பத்தாண்டுகளாக அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்கள் அனைவரையும் தமிழக அரசு விரைந்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன், என்றார்.


Tags : teachers ,government schools ,Seaman ,government , Government School, Part Time Teachers, Salary, Job, Permanence, Government, Seaman, Request
× RELATED பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம்