×

நாகை மீனவர் வலையில் 250 கிலோ எடையில் அரியவகை மீன் சிக்கியது

நாகை : நாகையில் பைபர் படகில் மீன்பிடித்த மீனவர் வலையில் 250கிலோ எடை கொண்ட அரிய வகை மீன் சிக்கியது. இதனால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நாகை துறைமுகத்தில் இருந்து அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், கல்லார் உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் நேற்றுமுன்தினம் பைபர் படகுகளில் மீன்பிடிக்க சென்றனர். கரை பகுதியில் மட்டுமே மீன்பிடித்தொழில் செய்யும் மீனவர்கள் கடலில் வலையை விரித்து மீன்களுக்காக காத்திருந்த நேரத்தில் திடீரென இடி மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. இதனால் மீனவர்கள் கரை திரும்பினர்.

இந்நிலையில் நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் அவசர அவசரமாக வலையை படகுக்குள் இழுத்தனர். அப்போது வலையோடு படகையும் கடலுக்குள் இழுத்து சென்றதால் அச்சமடைந்த மீனவர்கள் போராடி வலையை இழுத்தனர். இதில் மீனவர்கள் ஆச்சரியம் அடையும் வகையில் ஆழ்கடலில் கிடைக்கக்கூடிய அரியவகை மீன் இருந்தது. இந்த மீன் 14 அடி நீளம், 250 கிலோ எடை கொண்ட ஏ கிரேடு வகையை சேர்ந்தது. இதன்பின்னர் மீனவர்கள் மகிழ்ச்சியுடன் அந்த மீனை படகில் வைத்து கொண்டு கரை திரும்பினர். 10 மீனவர்கள் உதவியுடன் படகில் இருந்து அந்த மீனை இறக்கி கரைக்கு எடுத்து சென்றனர்.

Tags : fisherman ,Naga ,Nagapatinam , Nagapatinam , fisherman, Rare fish
× RELATED மீனவர் திடீர் சாவு