×

ஊரடங்கால் பக்தர்கள் வருகைக்கு தடை ஜூலை 15ல் ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழா

ராமநாதபுரம் : கொரோனா ஊரடங்கால் பக்தர்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் வரும் 15ம் தேதி ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழா எளிமையாக நடக்கிறது. ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி சுல்தான் செய்யது இப்ராகீம் பாதுஷா நாயகம் தர்கா மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு பல நூற்றாண்டுகளாக மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அனைத்து சமுதாய மக்களும் இணைந்து சந்தனக்கூடு திருவிழாவை நடத்தி வருகின்றனர். இத்திருவிழாவிற்கு தமிழகம் முழுவதும் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து பங்கேற்பது வழக்கம். கொரோனா பரவல் ஊரடங்கால் வழிபாட்டுத்தலங்களை திறக்க அனுமதியில்லை.

அதன்படி இந்த ஆண்டு 846வது ஆண்டு சந்தனக்கூடு திருவிழா கடந்த ஜூலை 2ம் தேதி முதல் 23 நாட்களுக்கு தொடர்ந்து மாலை நேரங்களில் உலக நன்மைக்கான சிறப்பு துஆவும், மவுலீது (புகழ் மாலை) அரசு அறிவித்த நெறிமுறைகளின்படி சமூக இடைவெளியுடன் குறைந்த எண்ணிக்கையில் ஹக்தார்களை கொண்டு ஓதப்பட்டு வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான ஜூலை 15ம் தேதி நடக்க உள்ள சந்தனக்கூடு ஊர்வலம் ரத்து செய்யப்பட்டு, அதிகாலை தர்காவில் உள்ள மக்பராவில் புனித சந்தனம் பூசும் நிகழ்ச்சி எளிமையாக நடக்க உள்ளது. தொடர்ந்து உலக மக்கள் அனைவரும் கொரோனா நோயிலிருந்து விடுபட சிறப்பு பிரார்த்தனை நடக்கிறது.
ஊரடங்கால் பக்தர்கள், யாத்ரீகர்கள் யாரும் தர்காவிற்குள் வர அனுமதி கிடையாது என ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாக சபையினர் தெரிவித்தனர்.

Tags : Airwari ,Devotees ,sandalwood festival ,Ervadi Sandalwood Festival , Ervadi ,Sandalwood ,Festival ,Devotees
× RELATED கோவை வெள்ளிங்கிரி மலையில் ஏறிய 3 பக்தர்கள் மூச்சு திணறி பலி