கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் அம்மா உணவகத்தில் பணிபுரியும் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், உணவகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1539 பேர் இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 747ஆக உள்ளது.
இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து விடுபட்டு 788 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆனால் கொரோனா நோயால் சிகிச்சை பலனின்றி கள்ளக்குறிச்சியில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மாவட்ட அதிகாரிகள் கொரோனா தொற்றை தடுக்க பல்வேறு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மாவட்டத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றனர். மேலும், அரசு அறிவுறுத்தலின்படி, முககவசம் அணிய வேண்டும் , கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் , சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்டவற்றை மக்கள் சரிவர கடைபிடிக்கின்றனரா? எனவும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து, கள்ளக்குறிச்சியில் உள்ள அம்மா உணவகத்தில் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது அவற்றின் முடிவுகள் வெளியான நிலையில், உணவகத்தில் பணிபுரிந்து வந்த ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், உணவகத்தை தொடர்ந்து திறந்து வைக்கப்பட்டால், மேலும் பலருக்கு கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், அம்மா உணவகத்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. மேலும், அந்த பகுதிகள் முழுவதும் கிருமிநாசி தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டன.