×

தேசத்தின் பாதுகாப்பு கருதி, தமிழர்களின் 150 ஆண்டு கால கனவான சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் : பிரதமர் மோடிக்கு டி.ஆர்.பாலு கடிதம்!!

சென்னை : முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் கனவுத் திட்டமான சேது சமுத்திர திட்டத்தை, இந்தியாவின் பாதுகாப்பு கருதி, உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில்,2005ல் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கி வைத்த சேது சமுத்திர திட்டம்  கடத்த 12 ஆண்டுகளாக முடங்கி உள்ளது.ராணுவ ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த சேது சமுத்திர கால்வாயை நிறைவேற்றுவது இந்தியப் பாதுகாப்புக்கு அவசியமானது ஆகும்.இலங்கையில் 700 கோடி டாலருக்கு மேல் முதலீடு செய்துள்ள சீனா துறைமுகத்தையும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

தென் சீனக் கடலிலும் தனது கடற்படையின் ஆதிக்கத்தை விரிவுப்படுத்த தொடர்ந்து சீனா முயற்சி செய்து வருகிறது. தற்போதைய சூழலில் தமிழகக் கடல் பகுதியில் உள்ள சேதுக் கால்வாய்த் திட்டம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.அண்ணா, காமராஜ், கலைஞர், வாஜ்பாய் ஆகிய தலைவர்கள் ஆதரித்தத் திட்டம் சேது கால்வாய்த் திட்டம். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் போதே சேதுக் கால்வாய் திட்டத்தின் சாத்தியக் கூறு ஆய்வு நடத்தப்பட்டது. தங்கள் ஆட்சிக் காலத்திலேயே சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

இந்தியாவின் பாதுகாப்புக் கருதி, தமிழர்களின் 150 ஆண்டு கால சேது சமுத்திர திட்டத்தை 2024ம் ஆண்டு தமிழர் திருநாளுக்கு முன்னதாகவே நிறைவேற்றி, தமிழக மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிரதமர் நரேந்திர மோடி பெற வேண்டும் என திமுக சார்பில் வேண்டுகோள் விடுகின்றேன், என்றார்.


Tags : nation ,Sethusamudram ,Tamils , Nation, Defense, Conservation, Tamils, Sethusamudram Project, Prime Minister Modi
× RELATED தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம்