×

கொரோனா தொற்றால் இறந்த மூதாட்டி உடலை எரிக்க பொதுமக்கள் எதிர்ப்பு

புழல்: சோழவரம் அருகே அருமந்தை கூட்ரோடு, விச்சூர் சாலையை சேர்ந்த 65 வயது மூதாட்டிக்கு, சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதியானது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மதியம் இறந்தார். அவரது உடலை நேற்று முன்தினம் மாலை அருமந்தை சுடுகாட்டில் எரிக்க, சுகாதார துறை அதிகாரிகள் கொண்டு வந்தனர். இதுபற்றி அறிந்த அப்பகுதி மக்கள், அங்கு திரண்டு, ‘‘கொரோனாவால் இறந்தவரின் உடலை மயானத்தில் திறந்தவெளியில் எரித்தால், சுற்றுப் பகுதி மக்களுக்கு நோய் தொற்று பரவும். எனவே, இங்கு சடலத்தை எரிக்க கூடாது’’ என எதிர்ப்பு தெரிவித்தனர். தகவலறிந்து சோழவரம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம், ‘சடலத்தை எரிப்பதால் நோய் தொற்று ஏற்படாது’ என்று கூறி சமாதானப்படுத்தினர். இதையடுத்து பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். சுமார் 2 மணி நேரம் கழித்து மூதாட்டியின் உடல் எரிக்கப்பட்டது.


Tags : protest ,coroner , Corona, dead, grandparent's body, burn, public protest
× RELATED 6 வழிச்சாலை பணிக்கு எதிர்ப்பு...