பெங்களூரு: கர்நாடகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக அமலில் உள்ள ஒருநாள் முழு ஊரடங்கை வாரத்தில் இரண்டு நாட்களாக நீடிப்பது குறித்து நாளை முக்கிய முடிவு எட்டப்படவுள்ளது. முதலமைச்சர் எடியூரப்பா தலைமையில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர். இந்த கூட்டத்திற்கு பிறகு ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் எடியூரப்பா அறிவிக்கவுள்ளார்.
தற்போது ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கர்நாடகத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் தொற்று வேகம்பிடிப்பதால் இதனை சனி மற்றும் ஞாயிறு என இரண்டு நாட்களாக மாற்றலாமா என்பது மாநில அரசின் யோசனையாகும். இதுகுறித்து கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்ததாவது, சில மாவட்டங்களில் நிலைமை கட்டுக்கடங்காமல் செல்கிறது. இதனை கையாள, மாவட்ட ஆட்சியாளர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்க உள்ளேன். ஊரடங்கு நீட்டிப்பு குறித்து, நாளை ஒரு கூட்டம் நடத்தவிருக்கிறேன்.
இந்த கூட்டம் முடிவுற்றவுன் ஊரடங்கு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவித்தார். மேலும், தக்ஷணாகன்னடா, மைசூரு, தார்வாட் மாவட்டங்களில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மாவட்ட ஆட்சியாளர்களே முடிவு செய்வார்கள் என்று எடியூரப்பா கூறியுள்ளார். தற்போது கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28,877 ஆக உள்ளது. மிக விரைவில் அதிக தொற்று ஏற்படும் மாநிலங்களின் பட்டியலில் கர்நாடகா, தெலுங்கானா இடம்பெறும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். இதனால் தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சியில் கர்நாடக அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.