மதுரை: மதுரையை சேர்ந்த இளைஞர்கள், ஆன்லைன் வகுப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை தீர்க்கும் விதமாக செயலி ஒன்றை உருவாக்கியுள்ளனர். கொரோனா பரவல் உலக நாடுகள் பலவற்றை பாதித்துள்ளது. இவை தற்போது இந்தியாவில் படையெடுக்க தொடங்கியுள்ளனர். இதனால், தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால், குழந்தைகள் வீட்டிலேயே முடங்கியுள்ள நிலை ஏற்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, மாணவர்களின் கல்வியை கருத்தில் கொண்டு பல தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், அரசு பள்ளி மாணவர்களும் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக வரும் 13ம் தேதியிலிருந்து ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும் என்று பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதனால் ஆன்லைன் வகுப்புகளை தொடங்குவதற்கு, தனி செயலியை உருவாக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை நிறைவேற்றும் விதமாக மதுரையை சேர்ந்த பிரவீன், தனசேகர், சமீர், பாலா, தினேஷ், கௌதம் ஆகியோர் இணைந்து ஆடெம் என்ற செயலியை உருவாக்கியுள்ளனர்.
இந்த செயலியை கணினி, செல்போன் உள்ளிட்டவற்றில் உள்ள பிலேஸ்டோர் மூலம் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த செயலியின் மூலம் மாணவர்களுக்கு நேரலையில் வகுப்புகள் நடத்தப்படுவதோடு, பாடங்களை பதிவு செய்தும் வெளியிடலாம். மேலும், தேர்வுகள் மற்றும் வீட்டுப்பாடங்களை அதில் பதிவிட்டு கொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் எழுந்தால் உடனடியாக செயலியில் உள்ள லைவ் சார்ட் பாக்ஸ் என்பதில் பதிவிடுவதற்கான வசதியும் செய்யப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு பாடம் சார்ந்த புத்தகங்கள், வீடியோக்கள், பிடிஎப் மற்றும் மைக்ரோசாப்ட் ஆவணங்கள் உள்ளிட்டவற்றை பதிவிட்டு அவற்றையும் படித்துக்கொள்ளக்கூடிய வசதிகளை ஏற்படுத்தியுள்ளதாக மதுரை இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், ஆபாச படங்கள் ஏதும் மாணவர்களை இடையூறு செய்யாத வகையில் பாதுகாப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பல்வேறு அம்சங்கள் கொண்ட இந்த செயலிக்குமாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த ஆடெம் செயலியை மாணவர்கள் அனைவரும் பயன்படுத்தி பயன்பெறுமாறு மதுரை இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.