×

தமிழக அரசு பிற்படுத்தப்பட்ட ஏழை எளிய மக்களின் நலனை என்றென்றும் காக்கும் அரணாக விளங்கும் : அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி

சென்னை : மருத்துவக் கல்வி இடஒதுக்கீடு விவகாரத்தில், தமிழக அரசு பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனை என்றென்றும் காக்கும் அரணாக விளங்கும் என, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக, அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று (ஜூலை 9) வெளியிட்ட அறிக்கையில்

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் பழங்குடியினருக்கு 7.5 விழுக்காடும், பட்டியல் பிரிவினருக்கு 15 விழுக்காடும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடும் மற்றும் பொதுப்பிரிவினருக்கு 50.5 விழுக்காடு என்ற இட ஒதுக்கீட்டு முறையை மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் அதாவது, எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற கல்வி நிறுவனங்களில் மத்திய அரசு கடைபிடித்து வருகிறது. ஆனால்,  அகில இந்திய தொகுப்பு இடங்களை நிரப்பும் போது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை மத்திய அரசு முறையாக பின்பற்றுவதில்லை என்ற தகவல் தெரியவந்தவுடன் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்றுமாறு கோரி மத்திய அரசுக்கு கடந்த 14.3.2018 அன்று தமிழ்நாடு அரசால் கடிதம் எழுதப்பட்டது.  பின் மேற்கண்ட கடிதத்திற்கு மத்திய அரசிடமிருந்து எவ்வித பதிலும் பெறப்படாததால், இக்கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தி மத்திய அரசுக்கு  13.1.2020 அன்று தமிழ்நாடு அரசால் கடிதம் எழுதப்பட்டது.

அகில இந்திய தொகுப்பு இடங்களை நிரப்பும் போது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் சலோனி குமாரி மற்றும் ஒருவர் தொடர்ந்த வழக்கு (எண். 596 / 2015)  நிலுவையில் உள்ளதை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசும் ஒரு மனுதாரராக தன்னை சேர்த்துக் கொண்டது. தமிழக மாணவர்களின் நலனில் அக்கறை கொண்ட மாண்புமிகு அம்மாவின் அரசு, உச்ச நீதிமன்றத்திலும் 50 விழுக்காடு கோரி தமிழ்நாடு அரசின் சார்பில் தனியாக மீண்டும் ஒரு வழக்கினை (எண்.13644/2020)  2.7.2020 அன்று தொடர்ந்து, மேற்படி வழக்கும் 9.7.2020 அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

மாண்புமிகு அம்மா அவர்களும்,  அவரைத் தொடர்ந்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும்,  ஏழை எளிய மாணவர்கள், குறிப்பாக, கிராமப்புற மாணவர்கள் மருத்துவ கல்வி பயில்வதற்கு தடையாக இருக்கும் ‘நீட்’ தேர்வினை ரத்து செய்ய வேண்டுமென்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.  நேற்றைக்கு கூட (8.7.2020) மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களுக்கு தற்போதுள்ள காலகட்டத்தில் ‘நீட்’ தேர்வினை நடத்ததுவது மிகவும் கடினம்  என்றும், பிளஸ் 2  தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையிலேயே மருத்துவ கல்விக்கு தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்கள்.

இட ஒதுக்கீடு சமூக, கல்வி ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்பட வேண்டும். பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்பது சமூக நீதிக்கு குந்தகத்தை விளைவிக்கும் என கருதப்படுகிறது.  மத்திய அரசுப் பணிகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படும் 27 விழுக்காடு இடஒதுக்கீட்டில், வருமான உச்ச வரம்பில், ஊதியம் மற்றும் விவசாய வருமானத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், தற்போது பின்பற்றப்பட்டு வரும் வளமான பிரிவினருக்கு உள்ள நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டும் என்று பிரதமரை முதல்வர் கடிதம் வாயிலாக வலியுறுத்தி உள்ளார்.

தமிழக அரசு சமூக நீதியை காப்பதுடன் பிற்படுத்தப்பட்ட, ஏழை எளிய மக்கள் நலனை காப்பதிலும் முன்னோடி அரசாக உள்ளது என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவர். தமிழக அரசு பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனை என்றென்றும் காக்கும் அரணாக விளங்கும் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்

இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Tags : Vijayabaskar ,Tamil Nadu ,state ,stronghold ,poor , Tamil Nadu Government, Backward, Poor, Protecting, Palace, Minister Vijayabaskar
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...