×

ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்: திமுக தொடர்ந்த வழக்கில் அதிரடி

சென்னை: ஓ.பி.எஸ் உட்பட 11 எம்.எல்.ஏ.,க்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரம் தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கில் சட்டப்பேரவை சபாநாயகர் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2017ம் ஆண்டு பதவி ஏற்றதும் பிப்ரவரி 18ம் தேதி தனது அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தார். அப்போது அவர் மீது அதிருப்தியில் இருந்த தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மாபா.பாண்டியராஜன், செம்மலை, சரவணன் உள்பட மொத்தம் 11 எம்.எல்.ஏ.க்கள் அவரது அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.

இந்நிலையில், எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தி.மு.க. தரப்பில் சபாநாயகரிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால், அதுகுறித்த எந்தவித நடவடிக்கைகளையும் அவர் எடுக்கவில்லை. இதையடுத்து திமுக தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட வழக்கில், சபாநாயகர் உத்தரவே இறுதியானது எனக்கூறி நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. தொடர்ந்து, உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக தி.மு.க சட்டசபை கொறடா சக்கரபாணி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.  

இந்நிலையில் நீண்ட நாளாக நிலுவையில் இருந்த மேற்கண்ட வழக்கு, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வில் கடந்த பிப்ரவரி 4ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, சபாநாயகருக்கு கேள்வி எழுப்பிய நீதிபதி, இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பிப்.14ம் தேதிக்குள் தமிழக சட்டசபை செயலாளர் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். இதை தொடர்ந்து, அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில் அனைவருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக சபாநாயகர் தரப்பில் நீதிமன்றத்தில் விளக்கம் கொடுக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றமும் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு முடித்து வைத்து உத்தரவிட்டது. இதையடுத்து, திமுக தரப்பில் கடந்த மாதம் 7ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் புதிய இடைக்கால மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் திமுக தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் ஆர்.சுபாஷ் ரெட்டி மற்றும் போபண்ணா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் வழக்கின் சாராம்சங்களை நீதிபதிகள் முன்னிலையில் எடுத்துரைக்க தயாரானார். ஆனால் அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, உங்களது மனுவின் கோரிக்கையை நாங்கள் தெளிவாக பரிசீலனை செய்துள்ளோம் என தெரிவித்தார்.

இதையடுத்து நேற்று நீதிபதிகள், “அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில் திமுக தரப்பில் தொடரப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக சட்டப்பேரவை சபாநாயகர் பதிலளிக்கவும், அதேபோல் அரசுக்கு எதிராக வாக்களித்த துணை முதல்வர் ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏ.,க்களுக்கும் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறது. இதுகுறித்த விளக்கங்களை மேற்கண்ட அனைவரும் அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’’ என அதிரடி உத்தரவை பிறப்பித்து, வழக்கை அடுத்த 4 வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Tags : Supreme Court ,speaker ,DMK Supreme Court ,OPS ,DMK , OPS, 11 MLAs, disqualification case, Speaker, Supreme Court notice
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...