சென்னை: தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவுகிறது. இதனால் வெப்ப சலனம் நீடித்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் மழையும் பெய்து வருகிறது. இதையடுத்து, வெப்ப சலனத்தால் வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்டுள்ள காற்று சுழற்சி தற்போது மத்திய வங்கக்கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இதனால் தென் மாவட்டங்கள், தமிழகத்தின் உள் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். இது தவிர புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். கோவை, நீலகிரி, சேலம், நாமக்கல், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். சென்னையை பொறுத்தவரையில் பிற்பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.