சென்னை: தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தால் வைப்பீட்டாளர்களின் நலனிற்காக, அதன் செயல்பாடுகளை தகவல் தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி ஆன்லைன் மூலமாக செயல்படுத்திடும் வகையில், www.tnpowerfinance.com என்ற புதிய வலைதளமும், டிஎன்பிஎப்சிஎல் என்ற கைப்பேசி செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது. இதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். புதிய வலைதளத்தின் மூலமாக, பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்திலுள்ள 8,000 பயனாளிகளுக்கு ரூ.30 கோடி நிதியை முதல்வர் வழங்கினார். இந்த புதிய வலைதளத்தின் மூலம் வைப்பீட்டாளர்கள் வைப்பீட்டு கணக்கை துவக்குதல், புதுப்பித்தல், முதிர்வடைந்த வைப்பீட்டு தொகையை பெறுதல், வைப்பீட்டு தொகையின் மூலம் கடன் பெறுதல், நாமினியின் பெயர் மாற்றம் செய்தல், வங்கி விவரங்களை புதுப்பித்தல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொள்ள முடியும். நிறுவனத்தின் சார்பில் கொரோனா தடுப்பு பணிக்காக அமைச்சர் தங்கமணி ரூ.5 கோடிக்கான காசோலையை முதல்வரிடம் அளித்தார்.