×

ரூ.45 லட்சம் மோசடி விவகாரம் நடிகர் விஷால் கணக்காளர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு

சென்னை: நடிகர் விஷால் நடத்தி வரும் சினிமா தயாரிப்பு அலுவலகத்தில் ரூ.45 லட்சம் மோசடி செய்த விவகாரத்தில் கணக்காளராக பணியாற்றி வந்த ரம்யா மீது போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். நடிகர் விஷால் சொந்தமாக விஷால் பிலிம் பேக்டரி என்ற சினிமா தயாரிப்பு நிறுவனம் ஒன்று நடத்தி வருகிறார். இவரது அலுவலகம் வடபழனி குமரன் காலனியில் உள்ளது. இவர் பல சினிமா படங்களை தயாரித்துள்ளார். இந்நிலையில் இவரது மேலாளர் ஹரி என்பவர்  கடந்த 3ம் தேதி வடபழனி போலீஸ் உதவி கமிஷனர் ஆரோக்கியம் பிரகாசத்திடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், நடிகர் விஷால் சினிமா தயாரிப்பு நிறுவன அலுவலகத்தில் ஆண்டு கணக்குகள் சரிபாக்கப்பட்டது.  அப்போது சிறுக சிறுக ரூ.45 லட்சம் வரை பணம் கையாடல் செய்யப்பட்டது தெரியவந்தது. எனவே எங்களுக்கு கணக்கு வழக்குகளை கவனித்து வந்த பெண் ஊழியர் ரம்யா மீது சந்தேகம் உள்ளது. அவரிடம் விசாரணை நடத்தி பணத்தை திரும்ப பெற்று தரவேண்டும் என்று கூறியிருந்தார்.

இதை ெதாடர்ந்து, உதவி கமிஷனர் உத்தரவுப்படி விருகம்பாக்கம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கடந்த 2015ம் ஆண்டு முதல் ரம்யா, விஷால் சினிமா தயாரிப்பு நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி வந்துள்ளார். பணிக்காலத்தில் சிறுக சிறுக பணத்தை தனது உறவினர் ஒருவரின் வங்கி கணக்கிற்கு செலுத்தியது தெரியவந்தது. பின்னர் போலீசார் ரம்யாவின் வங்கி கணக்கு மற்றும் அவரது உறவினர்கள் வங்கி கணக்குகளை ஆய்வு செய்த போது ரூ.45 லட்சம் வரை மோசடி செய்தது உறுதியானது. மேலும் அவர் தற்போது கணவருடன் தலைமறைவாக இருப்பதும் தெரியவந்தது. அதை தொடர்ந்து கணக்காளர் ரம்யா மீது விருகம்பாக்கம் போலீசார் ஐபிசி 408, 420, 468, 471 ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள ரம்யாவை செல்போன் சிக்னல் உதவியுடன் தேடி வருகின்றனர்.

Tags : Vishal ,accountant , 45 lakh, fraudulent affair, actor Vishal Accountant, 4 division, case record
× RELATED அரசியல் கட்சி தொடங்குகிறேன்: நடிகர் விஷால் அறிவிப்பு