கொல்கத்தா: கொரோனாவை காரணம் காட்டி மதசார்பின்மை பாடத்தை நீக்கி விட்டார்கள் என மேற்குவங்க முதலவர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் சுமையை குறைக்க சிபிஎஸ்சி (CBSE) அரசியல் அறிவியல் பாடத்திட்டத்தில் ஜனநாயக உரிமைகள், இந்தியாவில் உணவு பாதுகாப்பு, கூட்டாட்சி, குடியுரிமை மற்றும் மதச்சார்பின்மை போன்ற முக்கிய அத்தியாயங்களை நீக்கியுள்ளது. கொரோனா வைரஸ் அசாதாரண நிலைமை காரணமாக 2020-21க்கான பாடத்திட்டங்கள் மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கப்படும் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நேற்று அறிவித்திருந்தது. இதையடுத்து 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவியல் பாடத்திட்டங்களை சிபிஎஸ்சி மாற்றியமைத்துள்ளது.
இதற்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், கொரோனாவை காரணம் காட்டி 30 சதவீத பாடம் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் திட்டமிட்டு தங்களுக்கு தகுந்தவாறு பாஜக ஆதரவாளர்கள் இதனை பயன்படுத்திக் கொண்டனர். சிபிஎஸ்இ 9 மற்றும் 11ம் வகுப்பு அரசியல் அறிவியல் (Political Science) பாடத்தில் இடம்பெற்றிருந்த கூட்டாட்சி (Federalism), குடியுரிமை (Citizenship), தேசியம் (Nationalism), மற்றும் மதச் சார்பின்மை (secularism) ஆகிய அத்தியாயங்கள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளன. அதுபோலவே பொருளாதாரத்திலும் முக்கிய பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு பிடிக்காத பாடங்களை கரோனாவை காரணம் காட்டி நீக்கி விட்டார்கள், என அவர் கூறியுள்ளார்.