நாமக்கல்: நாமக்கல்லில் 15 ஆண்டுகளுக்கு முந்தைய லாரிகளை பயன்பாட்டிலிருந்து நீக்கும் மத்திய அரசின் முடிவை திரும்பப்பெற வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஊரடங்கால் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக நாடு முழுவதும் பல லட்சம் லாரிகள் இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், தங்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக லாரி உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும், கொரோனா முடக்கத்தால் நடுத்தர மக்கள் வருமானம் ஈட்ட முடியாத நிலையில், தினந்தோறும் திணறி வருகின்றனர். இந்நிலையில், கொரோனாவால் நாடே முடங்கியுள்ள நிலையில், மத்தய அரசு சுங்க கட்டணம், பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றின் விலையை அதிகமாக உயர்த்தி வருகிறது. இதனால், வாகன உரிமையாளர்கள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். இதனைத்தொடர்ந்து, கொரோனா முடக்கத்திலும், மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள பழைய லாரிகளை நீக்க திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், சிறிய லாரி உரிமையாளர்களின் நிலைமையை கருத்தில் கொண்டு 15 ஆண்டுகளுக்கு மேல் உள்ள வாங்கனங்களை ஒழிக்கும் முடிவுகளை கைவிடுமாறு மத்திய அரசுக்கு லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக, லாரி உரிமையாளர்கள் கூறுகையில், 15 ஆண்டுகளுக்கு பதிலாக 20 ஆண்டுகளுக்கு முந்தைய லாரிகளை பயன்பாட்டிலிருந்து நீக்கலாம் என கூறியுள்ளனர். மேலும், லாரி உரிமையாளர்கள் தங்களது வாகனங்களை மாற்றிக்கொள்ள போதிய அவகாசம் தரவேண்டும் எனவும் கூறியுள்ளனர்.