×

அடுத்த 48 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுவையில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகம், புதுவையில் அடுத்த 48 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு  வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் கடலூர், நாகப்பட்டினம், புதுவை, காரைக்கால் பகுதிகளின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அடுத்த 24 மணி நேரத்தில் புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், நாளை(09.07.2020) கோவை, நீலகிரி, சேலம், நாமக்கல், தேனி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு பிற்பகலில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடனும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 37 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியசும் நிலவக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் புதுக்கோட்டை மற்றும் ஜெயங்கொண்டம் பகுதிகளில் தலா 9 செ.மீ  மழை பதிவாகியுள்ளது. அதேபோல், ஊத்துக்கோட்டை, கலயநல்லூர் பகுதிகளில் தலா 8 செ.மீ  மழையும், பண்ருட்டி, தியாகதுர்கம் பகுதிகளில் தலா 7 செ.மீ  மழையும் பதிவாகியுள்ளது. மேலும், பள்ளிப்படில் 6 செ.மீ, திருவாலங்காடு,  அரிமளம்,காவேரிப்பாக்கம்,  வளவனூர், மே மாத்தூர் பகுதிகளில் தலா 5 செ.மீ , காஞ்சிபுரம், திருச்செங்கோடு, கோலியனூர், அதனக்கோட்டை பகுதிகளில் தலா 4 செ.மீ  மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்காக எச்சரிக்கை

ஜூலை 8(இன்று) கர்நாடகா, கோவா கடற்பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஜூலை 8 மற்றும் ஜூலை 9ம் தேதிகளில், வடக்கு அரபிக்கடல், குஜராத் கடற்பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்திலும், ஜூலை 9 மற்றும் 10ம் தேதிகளில் கர்நாடகா,  கேரளா, லட்சத்தீவு கடற்பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.  ஜூலை 8 முதல் 12ம் தேதி வரை தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 50-60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : New Delhi ,Tamil Nadu ,rainfall ,Chennai Meteorological Center , Atmospheric Overlay Cycle, Tamil Nadu, Puduvai, Rain, Chennai Weather Center
× RELATED அங்கித் திவாரி விவகாரத்தில் அமலாக்கத்துறை பதிலளிக்க அவகாசம்