×

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கக் கோரிய வழக்கு: தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபாலுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்...!!

டெல்லி: முதல்வர்  எடப்பாடி பழனிசாமி கடந்த 2017ம் ஆண்டு பதவி ஏற்றதும் பிப்ரவரி 18ம் தேதி  தனது அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தார். அப்போது அவர்  மீது அதிருப்தியில் இருந்த தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மா.பா.பாண்டியராஜன், செம்மலை, சரவணன் உள்பட மொத்தம் 11 எம்.எல்.ஏ.க்கள்  அவரது அரசுக்கு எதிராக வாக்களித்தனர். இருப்பினும் எடப்பாடி பழனிசாமி  அரசுக்கு 122 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருந்ததால் நம்பிக்கை கோரும் தீர்மானம்  வெற்றி பெற்றது.  இந்த  நிலையில் எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என  தி.மு.க. தரப்பில் சபாநாயகரிடம் மனு கொடுக்கப்பட்டது.

ஆனால் அதுகுறித்த  எந்தவித நடவடிக்கைகளையும் அவர் எடுக்கவில்லை. இதையடுத்து திமுக தரப்பில்  மீண்டும் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், சபாநாயகர்  உத்தரவே இறுதியானது எனக்கூறி நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக தி.மு.க சட்டசபை கொறடா  சக்கரபாணி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல்  செய்தார். இந்த விவகாரத்தில் அனைவருக்கும்  விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக சபாநாயகர் தரப்பில் விளக்கம்  கொடுக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் திமுக தரப்பில் நேற்று உச்சநீதிமன்றத்தில் புதிய இடைக்கால மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், அரசுக்கு எதிராக வாக்களித்த  விவகாரத்தில் ஓபி.எஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய  வழக்கில் உத்தரவு வந்து மூன்று மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் இதுவரை  சபாநாயகர் எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை. அதனால் இந்த விவகாரத்தில்  நீதிமன்றம் தாமாக முன்வந்து மேற்கண்ட வழக்கை அவசர மனுவாக கருதி உடனடியாக  விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் பதில் அளிக்கும்படி சபாநாயகர் தனபாலன் மற்றும் சட்டப்பேரவை செயலாளர் மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். தொடர்ந்து, வழக்கின் விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைப்பதாக தெரிவித்தனர்.

இந்த வழக்கைப் பொருத்தவரை அரசுக்கு எதிராக 11 எம்எல்ஏக்களும் வாக்களித்திருந்தாலும் அவர்கள் அதிமுக-வுக்கு எதிராக செயல்படவில்லை என்பதால் கட்சித்தாவல் தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டிய அவசியம் எழவில்லை என முதல்வர் பழனிசாமி கூறியிருந்தார். இருப்பினும், மணிப்பூர் சட்டமன்றத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட வாய்ப்பு  இருந்தும், சபாநாயகரால் இன்னும் முடிவு எடுக்கப்படாமல் உள்ள 7 எம்எல்ஏக்களை சட்டமன்ற அலுவல்களில் கலந்து கொள்ள மணிப்பூர் உயர் நீதிமன்றம் தடை  விதித்துள்ளது. இதை சுட்டிக்காட்டி, சபாநாயகர் உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் பட்சத்தில் நீதிமன்றமே தனது அதிகாரத்தை பயன்படுத்தி முக்கிய முடிவுகளை  எடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : SC ,Tanapal ,Speaker ,Supreme Court ,OPS , SC dismisses 11 MLAs including OPS: Supreme Court notice to Speaker Tanapal
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்; 50...