விருதுநகர்: விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒரு அறை தரைமட்டமானது. ஒருவர் படுகாயமடைந்தார். விருதுநகர் மாவட்டம், ஆமத்தூர் அருகே நாட்டார்மங்களத்தில் சிவகாசியை சேர்ந்த கணேசன் என்பவருக்கு சொந்தமாக, நாக்பூர் உரிமம் பெற்ற பட்டாசு ஆலை 78 ரூம்களுடன் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டு இருந்தனர். ஒரு அறையில் தவசிலிங்கபுரத்தை சேர்ந்த ராமகுருநாதன்(36) மருந்து கலக்கி கொண்டு இருந்தார்.
அப்போது திடீரென ஏற்பட்ட உராய்வினால் வெடி விபத்து ஏற்பட்டு, அறை முழுவதும் தரைமட்டமானது. இதில் ராமகுருநாதன் படுகாயமடைந்தார். இவருக்கு விருதுநகர் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. தீவிர சிகிச்சைக்காக பின்னர் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விபத்து தொடர்பாக ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.