திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு அருகே வாழ்வாதாரம் இன்றி தவித்து வரும் பழங்குடியின மக்களுக்கு குடும்ப அட்டை இல்லாததால் கொரோனா நிவாரணம் பெற முடியவில்லை என மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். கொரோனா முடக்கத்தால் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தினந்தோறும் கூலி வேலைகள் செய்யும் தொழிலாளிகள் தான். இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள ஆலந்தாங்கல் கிராமத்தில் வசித்து வரும் மலைவாழ் மக்கள் கொரோனா அச்சத்தால் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாக கவலை அளிக்கின்றனர்.
மரம் வெட்டும் தொழிலையே தம்பி உள்ள அவர்கள் தற்போது கொரோனா முடக்கத்தால் வேலை இழந்து தவித்து வருவதாக கூறுகின்றனர். மேலும், தங்களுக்கு குடும்ப அட்டை இல்லாததால் அரசு நிவாரண தொகையை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, கிராமத்தில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு குடும்ப அட்டை வழங்ககோரி அதிகாரிகளிடம் பலமுறை விண்ணப்பித்தும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என மலைவாழ் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்குக்கூட நாள்தோறும் திணறி வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர். இதனால், பழங்குடியின மக்கள் ரேஷன் அட்டைகள் உள்ளிட்ட பல வசதிகளை செய்துதர வேண்டி மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.