சென்னை: சென்னையில் ஊர்க்காவல் படையை சேர்ந்த கூடுதல் டிஜிபி உட்பட 20 போலீசாருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதியானது. சென்னையில் ஊரடங்கு மற்றும் தடை செய்யப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசாரிடையே கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், ஊர்க்காவல் படையை சேர்ந்த கூடுதல் டிஜிபி ஒருவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது. அதையடுத்து அவரை சுகாதாரத்துறை அதிகாரிகள் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதேபோல், மாநகர காவல் துறையில் உதவி ஆய்வாளர்கள் உட்பட 19 பேருக்கு நோய் தொற்று உறுதியானது.
அவர்களையும் அதிகாரிகள் ஐஐடி மற்றும் காவலர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும், கூடுதல் டிஜிபி மற்றும் 19 போலீசாருடன் நேரடி தொடர்பில் இருந்த போலீசார் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களை அதிகாரிகள் தனிமைப்படுத்தி உள்ளனர். சென்னை மாநகர காவல்துறையில் நேற்று வரை மொத்தம் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 1,347 ஆக உயர்ந்துள்ளது. நேற்று சிகிச்சை பெற்று வந்த 24 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 662 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல், கொரோனாவிற்கு இன்ஸ்பெக்டர் உட்பட 3 பேர் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.