×

வெளி நாடுகளில் சிக்கியுள்ள 26 ஆயிரம் தமிழர்களை அழைத்துவர எடுத்த நடவடிக்கை என்ன? மத்தியஅரசு விளக்கமளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் 25,939 தமிழர்களை தமிழகம் அழைத்து வர எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்கள், சொந்த ஊர்களுக்கு திரும்ப ஏதுவாக தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில், விமானங்கள் தரையிறங்க அனுமதி வழங்க உத்தரவிடக் கோரி திமுக செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதே கோரிக்கையுடன் ராஜா முகமது என்பவரும் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்குகள் நேற்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வெளிநாடுகளில் சிக்கியுள்ள சுமார் 26 ஆயிரம் பேரை மீட்க 146 விமானங்கள் தேவைப்படும் நிலையில், அதற்கான விளக்கத்தை மத்திய அரசு இதுவரை தெரிவிக்கவில்லை என திமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.வில்சன் வாதிட்டார். மேலும், இந்திய தூதரகத்தில் உள்ள இந்திய சமூகநல நிதியம் மூலமாக வெளிநாடுகளில் பசியாலும் வறுமையாலும் சிக்கி தவிக்கும் தமிழர்களுக்கு தேவையான உதவிகள் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

இதற்கு பதிலளித்த மத்திய அரசு வழக்கறிஞர், தமிழக விமான நிலையங்களில் தமிழர்கள் வந்து இறங்காததாலேயே அவர்கள் தமிழகம் திரும்பவில்லை என கூற முடியாது. ஏராளமான தமிழர்கள் மற்ற மாநில விமான நிலையங்கள் வழியாக சொந்த ஊர் திரும்பியுள்ளனர்.  இதுவரை வெளிநாடுகளில் சிக்கி இருந்த 43 சதவீதம் தமிழர்கள் தமிழகம் திரும்பியுள்ளனர். ஜூலை 3ம் தேதி முதல் ஜூலை 11ம் தேதி வரை இயக்கப்படும் 495 சர்வதேச விமானங்களில் 44 விமானங்கள் தமிழகத்தில் தரையிறங்கும் என்றார். இதையடுத்து, வெளிநாடுகளில் சிக்கியுள்ள 25,939 தமிழர்களை தமிழகம் அழைத்து வர எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும், இந்திய சமூக நல நிதியம் மூலமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது தொடர்பாகவும் விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் 20ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Tags : Tamils ,countries ,government , Foreign, Trapped, 26 Thousand Tamils
× RELATED தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம்