×

சிறுமியை எரித்து கொன்றவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்: தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை: சிறுமியை எரித்துக் கொன்றவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ராமதாஸ், திருநாவுக்கரசர் வலியுறுத்தி உள்ளனர். ராமதாஸ் (பாமக நிறுவனர்): திருச்சி அடுத்த அதவத்தூர்பாளையத்தை சேர்ந்த 14 வயது சிறுமியை வீட்டிற்கு அருகே, அப்பகுதியை சேர்ந்த சில மனித மிருகங்கள் சீரழித்து கொலை செய்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. வேலூரை அடுத்த பாகாயத்தில் 10ம் வகுப்பு மாணவி பாலியல் மிரட்டலால் தீக்குளித்து தற்கொலை செய்தது, செய்யூர் அருகில் இளம்பெண் ஒருவர் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாக்கப்பட்டு மர்மமான முறையில் கொல்லப்பட்டது, அறந்தாங்கி அருகில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது என இளம்பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.

திருச்சி அருகே சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் கொலையாளிகளை விரைவாக கண்டுபிடித்து, அவர்களுக்கு சட்டப்படி கடுமையான தண்டனை பெற்றுத் தரவும் இனியும் இத்தகைய நிகழ்வுகள் நடப்பதை தடுக்கவும் தமிழக அரசு மற்றும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். பெற்றோரும் தங்களின் குழந்தைகளை யாரையும் நம்பாமல் எச்சரிக்கையுடன் பார்த்துக் கொள்ள வேண்டும். திருநாவுக்கரசர் (தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்): விவசாயி பெரியசாமியின் 14 வயது மகள் கங்காதேவி எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். மனிதாபிமானமற்ற இழி செயலில் ஈடுபட்ட மனித மிருகங்கள் எவராயினும் காவல்துறை விரைந்து அடையாளம் கண்டு உடனடியாக கைது செய்து கடுமையான தண்டனை வழங்கிட வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு கணிசமான நிதி உதவி  வழங்கவேண்டும். தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிராக சமீபகாலமாக தொடரும் இதுபோன்ற வன்கொடுமைகள் தடுத்து நிறுத்தப்பட காவல்துறை வேகமான உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.

சரத்குமார் (சமக தலைவர்): சோமரசம்பேட்டை பகுதியை சார்ந்த 9ம் வகுப்பு சிறுமி உடல் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது நெஞ்சை பதறச் செய்கிறது. அறந்தாங்கி சிறுமி பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்த சம்பவம் நம் மனதில் நீங்காமல் இருக்கும் போது, அச்சம்பவம் ஆறுவதற்குள்ளாக திருச்சியில் நடந்தேறிய இக்குற்ற சம்பவம் மிகுந்த மனவேதனை அளிக்கிறது. சிறுமியின் உடலை கருணையின்றி தீ வைத்து எரித்த மனித மிருகங்களை, கொடூர அரக்கர்களை விசாரணையின் மூலம் விரைந்து கண்டறிந்து, ஏற்கனவே பலமுறை வலியுறுத்தி வருவது போல கட்டாயம் மரண தண்டனை வழங்க வேண்டும்.

Tags : Leaders , Little girl, burner, severe punishment, render, leaders, insistence
× RELATED ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க...