புதுடெல்லி: இந்தியாவின் மொத்த கொரோனா வைரஸ் பாதிக்கபட்டோர் மற்றும் இறப்பு விகிதமானது 10 லட்சம் மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது உலகிலேயே மிகவும் குறைவாகும். மத்திய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: உலக சுகாதார அமைப்பின் 168வது அறிக்கையின்படி 10 லட்சம் மக்கள் தொகைக்கு கொரோனா இறப்பு விகிதமானது இந்தியாவில் 503.37 ஆக உள்ளது இதுவே, சர்வதேச அளவில் சராசரியாக 10 லட்சம் பேருக்கு 1453.25 பேர் இறந்துள்ளனர். சிலி நாட்டில் 10 லட்சம் பேரில் 15,459.8 பேரும், பெருவில் 9,070.8 பேரும் இறந்துள்ளனர். அமெரிக்கா, பிரேசில், ஸ்பெயின், ரஷ்யா, இங்கிலாந்து, இத்தாலி மற்றும் மெக்சிகோவில் 10 லட்சம் பேரில் முறையே 8,560.5, 7,419.1, 5,358.7, 4,713.5, 4,204.4, 3,996.1 மற்றும் 1,955.8 பேர் இறந்துள்ளனர். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
அதே சமயம், நேற்று ஐந்தாவது நாளாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து 20 ஆயிரத்தை கடந்து வருகின்றது. நேற்று காலை 8 மணி வரையிலான 24மணி நேரத்தில் புதிதாக 22,252 பேருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. 467 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20160 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 4,39,947 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 2,59,557 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 61.13 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். நேற்று முன்தினம் நிலவரப்படி இந்தியாவில் 1,201 கொரோனா மருத்துவமனைகள், 2,611 சுகாதார மையங்கள், 9,909 கொரோனா பராமரிப்பு மையங்கள் இயங்கி வருகின்றன.