×

கத்திப்பாரா ஜெனார்த்தனன் மாரடைப்பால் காலமானார்: அரசியல் கட்சியினர் அஞ்சலி

சென்னை: தமிழ்நாடு மண் அள்ளும் இயந்திர உரிமையாளர் நலச்சங்க தலைவரும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில துணை தலைவருமான கத்திப்பாரா ஜெனார்த்தனன் (73), வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 11.45 மணிக்கு மாரடைப்பால் அவர் இறந்தார். தொடர்ந்து, அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக கிண்டி கத்திப்பாரா அருகில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவருடன், தென்சென்னை வடக்கு மாவட்ட தமாகா தலைவர் சைதை மனோகரன், பொருளாளர் கிண்டி மம்மு, பகுதி தலைவர்கள் கோயில் பாஸ்கர், ஆலந்தூர் பாஸ்கரன், இளம்புயல் சுரேஷ், இருதயராஜ் உள்ளிட்ட கட்சியினரும் அஞ்சலி செலுத்தினர்.

மேலும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆலந்தூர் மண்டல முன்னாள் தலைவர் நாஞ்சில் பிரசாத் மற்றும் தமிழ்நாடு மண் அள்ளும் இயந்திர உரிமையாளர்கள் நலச்சங்கத்தை சேர்ந்த ஏராளமானோர் அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தமிழக பாஜ சார்பில் மாநில தலைவர் எல்.முருகன் இரங்கல் தெரிவித்தார். இதேபோல், பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள், முக்கிய பிரமுகர்கள் பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதை தொடர்ந்து கிண்டியில் உள்ள இடுகாட்டில் நேற்று மாலை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. கத்திப்பாரா ஜெனார்த்தனனுக்கு கீதா ஜெனார்த்தனன் என்ற மனைவியும், விவேக் என்ற மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Kathipara Janardhanan ,parties ,heart attack , Kathipara janarthanan, heart attack, passed away, political parties, tribute
× RELATED இந்தியா கூட்டணி கட்சிகள் கலந்தாலோசனை...