கயத்தாறு : கயத்தாறு அருகே உள்ள பராக்கிரமபாண்டியன் குளம் பகுதியில் முதுமக்கள் தாழி மற்றும் பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்படுவதால் தொல்லியல் துறை அந்த பகுதியில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சமீப காலமாக தமிழகத்தின் பல இடங்களில் நடக்கின்ற அகழ்வாராய்ச்சியில் கிடைக்கின்ற பொருட்கள் மற்றும் தடயங்கள் நமது முன்னோரின் பண்டைய கால வாழ்க்கை வரலாற்றை நமக்கு உணர்த்தும் விதமாக உள்ளது. இந்நிலையில் கயத்தாறு தாலுகா, ராஜாபுதுக்குடி கிராமத்திற்கு கிழக்கே வேப்பன்குளம் மடைக்கு மேற்கே சிற்றாறு பொதுப்பணித்துறையின் இந்திரகுளம் பராக்கிரம பாண்டியன் குளத்தின் வடக்கு பகுதியில் மின் நிறுவன பணிகளுக்கு குழி தோண்டும் பணி நடைபெறுகிறது.
அங்கு பல இடங்களில் பழங்கால ஓடுகள், மண் பானைகள், மனித எலும்புகள், முதுமக்கள் தாழிகள் கிடைத்த வண்ணம் உள்ளது. இந்த மண் பானைகள் மற்றும் ஓடுகள் பழங்காலத்தை சேர்ந்தவையாக இருக்க வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த இடத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு தங்க ஆபரணங்கள் கிடைத்ததாகவும் கூறப்படுகிறது. எனவே கலெக்டர் மற்றும் மாவட்ட வருவாய் துறை அந்த இடத்தை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து தொல்லியல் துறை மூலம் அகழாய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.