சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தாராபுரம் வட்டம், மானூர் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 55 வயது விவசாயி ராஜாமணி அங்குள்ள தனியார் வங்கியில் விவசாயக் கடன் பெற்றிருந்தார்.மத்திய அரசு, ரிசர்வ் வங்கி ஆகியவை இந்த காலத்தில் வட்டி வசூலிப்பு மற்றும் தவணை வசூலிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாதென்று பல்வேறு வகைகளில் அறிவித்திருக்கிறது. இதை மீறுகிற வகையில் கடந்த இரு வாரங்களாக வங்கிக் கிளை மேலாளர் குண்டர்களுடன் வசூல் பிரிவு ஊழியர்கள் ராஜாமணி தோட்டத்திற்கு சென்று தொடர்ந்து மிரட்டியிருக்கின்றனர். இதனால் அவர் தற்கொலை செய்துள்ளார். தற்கொலைக்கு காரணமான தாராபுரம் நகர வங்கி கிளை மேலாளர் மற்றும் கடன் வசூல் அதிகாரிகள் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்து, கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். மேலும் விவசாயி ராஜாமணி பெற்ற அனைத்துக் கடனையும் தள்ளுபடி செய்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ.50 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.