சென்னை: காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேல் அடுக்கில் உருவான காற்று சுழற்சி, காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக மத்திய வங்கக் கடல் பகுதியில் இருந்து நகர்ந்து சென்று தென் மாநிலங்களின் பெரும்பாலான பகுதிகளில் பரவியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கோவை, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, நீலகிரி, தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். இது தவிர சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், புதுச்சேரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும்.