×

அரசுப்பணி பதவி உயர்வில் இடஒதுக்கீடு சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிற்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

சென்னை: அரசுப் பணிகளில் வழங்கப்படும் பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு தடை விதிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை நேற்று தள்ளுபடி செய்தது. தமிழகத்தில் அரசு பணி நியமனங்களுக்கு 69 சதவீதம் இடஒதுக்கீடு என்பது நடைமுறையில் வருகிறது. இந்நிலையில் கடந்த 2003 முதல் அரசு பணியில் உள்ளவர்களுக்கு பணிமூப்பு மற்றும் பதவி உயர்வுக்கும் சுழற்சி முறையில் இடஒதுக்கீடு முறை செயல்படுத்தப்பட்டு வந்தது. இதையடுத்து முதலாவதாக தமிழக அரசின் இந்த நடைமுறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சுழற்சி முறையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை கடந்த 2016ல் உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், கடந்த 2016ல் தமிழக அரசு பணி மூப்பு, பதவி உயர்வுக்கான இடஒதுக்கீட்டை வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சட்ட விதியில் திருத்தங்கள் கொண்டு வந்தது. இந்த சட்டவிதிகளை எதிர்த்து அரசின் பல்வேறு துறைகளை சார்ந்த 60க்கும் மேற்பட்ட அதிகாரிகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘‘அரசு ஊழியர்கள் சட்ட விதிகளில் மாநில அரசு திருத்தம் செய்துள்ளது என்பது அந்த விதிகளுக்கு புறம்பாக பின்பற்றப்பட்ட நடைமுறையாகும். இதனை ஏற்க முடியாது. குறிப்பாக, இந்த நடைமுறையால் மறைமுகமாக 69 சதவீத இடஒதுக்கீட்டிற்கு அதிகமாக இடஒதுக்கீடு வழங்கியதாக கருதப்படும். மேலும், அரசு ஊழியர்களுக்கு மதிப்பெண் தகுதி அடிப்படையில் மீண்டும் பணி மூப்பு பட்டியலை 12 வாரங்களுக்குள் புதிதாக தயாரிக்க வேண்டும்’’ என தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், உயர்நீதிமன்றத்தின் மேற்கண்ட உத்தரவால் அரசுப் பணியில் இருக்கும் 2 லட்சத்திற்கும் மேலானோர் பாதிப்படைந்துள்ளனர். அதனால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி அருண்மிஸ்ரா தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து உத்தரவில்,”அரசுப் பணியில் பதவி உயர்வில் இடஒதுக்கிடு வழங்குவது என்பதை ஏற்க முடியாது. இதுஅடிப்படை உரிமை மீறலாக தான் கருதப்படும். மேலும் இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கும் தடை விதிக்க முடியாது என மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், அரசுப் பணிகளில் பதவி உயர்வில் இடஒதுக்கீடு என்பதில் தமிழக அரசு தரப்பில் தாக்கல் செயப்பட்டிருந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்து நேற்று உத்தரவிட்டனர். அரசுப் பணியில் பதவி உயர்வில் இடஒதுக்கிடு வழங்குவது என்பதை ஏற்க முடியாது. இது அடிப்படை உரிமை மீறலாக தான் கருதப்படும்.


Tags : Supreme Court ,Madras High Court , Government post, reservation, Madras High Court order, Prohibition, Supreme Court denial, Government of Tamil Nadu, appeal, dismissal
× RELATED இரட்டை இலை சின்னத்தை முடக்க கோரி ஓபிஎஸ் மனு