×

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் முற்றுகை போராட்டம்

தண்டையார்பேட்டை: சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மற்றும் ஆந்திராவை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ஏராளமான தொழிலாளர்கள் மீன் இறக்குதல், வலை பின்னுதல், படகுகளை பழுது பார்த்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஊரடங்கு காரணமாக கடந்த 100 நாட்களாக காசிமேடு துறைமுகம் மூடப்பட்டது. இதனால், வேலையிழந்த மீனவர்கள் வீட்டு வாடகை, மின் கட்டணம், கடன் பிரச்னை, மருத்துவ செலவுகளை சமாளிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இவர்கள், தங்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும், எனவே அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், மீன்பிடி தொழிலுக்கு அனுமதிக்க வேண்டும், பிடித்து வரும் மீன்களை பாதுகாப்பாக விற்பனை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என அரிடம் வலியுறுத்தி வந்தனர்.

ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை, என கூறப்படுகிறது. இந்நிலையில், மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீனவ தொழிலாளர்கள் நேற்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராயபுரம் உதவி கமிஷனர் தினகரன் தலைமையிலான போலீசார், மீன்வளத்துறை உதவி இயக்குனரிடம் பேசி, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் காசிமேடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பூர்: புளியந்தோப்பில் உள்ள ஆடுதொட்டி ஊரடங்கு காரணமாக கடந்த 100 நாட்களாக  மூடப்பட்டுள்ளது. இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். இவர்கள், கடந்த 10 நாட்களுக்கு முன்பு வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமாரிடம், இந்த ஆடுதொட்டியை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதை கண்டித்து 300க்கும் மேற்பட்ட வியாபாரிகள், புளியந்தோப்பு  பகுதியில் நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். தகவலறிந்து புளியந்தோப்பு உதவி கமிஷனர் ஜெயசிங், இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் திருவிக நகர் மண்டல செயற்பொறியாளர் நாச்சான் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து, வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, “கடந்த 100 நாட்களுக்கும் மேலாக இறைச்சி கூடங்கள் மூடப்பட்டுள்ளது. இதை நம்பி 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். சென்னையில் 90 சதவீத ஆட்டிறைச்சி மற்றும் மாட்டிறைச்சி இங்கிருந்துதான் அனுப்பப்படுகிறது. இறைச்சி கூடங்களை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் எங்களது வாழ்வாதாரம்  பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த பிரச்னையில் அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்” என வியாபாரிகள் தெரிவித்தனர். அதற்கு, ‘‘ஆட்டிறைச்சி கூடத்தை திறக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து வியாபாரிகள் கலைந்து சென்றனர்.

Tags : fishing port ,Kasimedu ,Fishermen , Kasimedu, fishing harbor, fishermen, siege struggle
× RELATED காசிமேடு அருகே மீன் பிடித்தபோது...