×

கொரோனா வேகமாக பரவுவதால் பெங்களூர் வாசிகள் அச்சம்..! தலைநகரை விட்டு சாரைசாரையாக சொந்த ஊர்களுக்கு படையெடுப்பு

பெங்களூரு: சென்னையை போல பெங்களூரிலும் கொரோனா வேகமாக பரவி வருவதால் மக்கள் சாரைசாரையாக சொந்த ஊர்களுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். கர்நாடகத்தில் கொரோனா கட்டுக்குள் இருப்பதாக அரசு கூறிவந்த நிலையில், நிலைமை தற்போது தலைகீழாக மாறியுள்ளது. அந்த மாநிலத்தில் தினசரி 2 ஆயிரம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களில் 1200 பேர் பெங்களூருவை சேர்ந்தவர்களாக உள்ளனர். இதன் விளைவு பெங்களூருவில் இதுவரை பாதிக்கப்பட்டோரது எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. கொரோனா சிகிச்சை மையங்களில் அடிப்படை வசதிகள் இல்லை.

உணவு, குடிநீருக்கு கூட நோயாளிகள் அல்லல்படும் சூழல் நிலவுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் அச்சமடைந்துள்ள தலைநகர வாசிகள் பெங்களூரை விட்டு வெளியேறி வருகிறார்கள். இந்த நிலையில் யாரும் அச்சப்பட வேண்டாம். தேவையான தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டிருப்பதாக முதலமைச்சர் எடியூரப்பா கூறியுள்ளார். இதுகுறித்து எடியூரப்பா தெரிவித்ததாவது, பெங்களூரு மக்களே வெளியேற வேண்டாம். தடுப்பு நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. அனைவருக்கும் சிகிச்சை அளிக்க மருத்துவமனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. எந்த காரணத்தை கொண்டும் அச்சப்பட தேவையில்லை. பேரிடர் நடுவே நாம் வாழ கற்றுக்கொள்வோம். மக்கள் அரசுக்கு உறுதுணையாக இருந்தால் அரசு மக்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என தெரிவித்தார்.

இதனிடையே கொரோனா சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்களை வாங்கியதில் எடியூரப்பா அரசு பெரும் ஊழல் செய்திருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. ஆளும் பாரதிய ஜனதா அரசை கண்டித்து பெங்களூருவில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. காங்கிரசின் குற்றச்சாட்டினை அடியோடு மறுத்துள்ள எடியூரப்பா அரசு, தேவைப்பட்டால் மருத்துவ உபகரணங்களை வாங்கிய ரசீதுகளை எதிர்க்கட்சி தலைவர்கள் ஆய்வு செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. மேலும், பேரிடர் நேரத்தில் யாரும் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம் என்றும் கர்நாடக அரசு வலியுறுத்தியுள்ளது.

Tags : residents ,Bangalore ,hometowns ,invasion ,capitalists , Corona, Bangalore, Hometowns
× RELATED பெங்களூரு குண்டுவெடிப்பு – தமிழ்நாட்டில் NIA சோதனை