டெல்லி: கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக நாட்டின் முக்கிய நகரங்கள் முடக்கப்பட்டுள்ளதால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் 4.5 சதவீதமாக குறைந்துவிடும் என்று மத்திய நிதி அமைச்சகம் கணித்துள்ளது. இதுதொடர்பான விவரங்களை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தின்போது இந்திய பொருளாதாரம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் வெளியிடப்பட்டன. அதில் நடப்பாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.4 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது. ஆனால் பொது முடக்கம் மார்ச் இறுதியில் ஏற்படுத்தப்பட்டு 100 நாட்களை கடந்தும் தொடர்ந்து வருகிறது. இதனால் முக்கிய பல தொழில்கள் வரலாறு காணாத பாதிப்பை சந்தித்துள்ளன. கொரோனாவுக்கு தடுப்பு மருந்தோ அல்லது பாதிக்கப்பட்டால் குணமளிக்கும் மருந்துகளோ கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால்தான் சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்காக பொது முடக்கம் தொடர்ந்து நீட்டிக்கப்படுகிறது.
இருப்பினும் மத்திய அரசின் சீர்திருத்தங்கள், சமூக நல திட்டங்கள், பொது முடக்க காலத்தில் போடப்பட்ட சிறப்பு திட்டங்கள் உள்ளிட்டவற்றால், பொருளாதாரத்தை சரி செய்ய முடியும் என நிதி அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.