சேலம்: சேலம் அருகே விவசாய நிலத்திற்கான வழித்தட தகராறில் சொந்த அண்ணணையே ரேடியோவில் வெடிகுண்டு வைத்து தம்பி கொலை செய்த சம்பவத்தில் படுகாயமடைந்த 12 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பணமரத்துப்பட்டி அருகே தும்பிப்பட்டியை சேர்ந்த விவசாயி மணி என்கிற மாரிமுத்து கடந்த 17ம் தேதி வீட்டின் அருகே கிடந்த எப்.எம். ரேடியோவை எடுத்து வந்து மின் இணைப்பு கொடுத்து பார்த்து கொண்டிருந்தார்.
அப்போது அது திடீரென வெடித்து சிதறியதால் உடல் சிதறி நிகழ்விடத்திலேயே அவர் உயிரிழந்துவிட்டார். அவருடைய 12 வயது பேத்தி சவுரதி மேலும் நண்பர்கள் 3 பேர் என நான்கு பேரும் படுகாயமடைந்தனர். இந்த வழக்கில் திடீர் திருப்பமாக சொந்த அண்ணன் வெங்கடேசன் கைது செய்யப்பட்டார். நிலத்தகராறு காரணமாக வெங்கடேசன், ரேடியோவில் வெடிமருந்துகளை வைத்து அதனை மணியின் வீட்டருகே வீசி சென்றுள்ளார்.
அதனை எடுத்துவந்த மணி மின் இணைப்பு கொடுத்து இயக்கியபோதுதான் வெடித்து சிதறி உயிரிழந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தில் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மணியின் பேத்தி 12 வயது சிறுமி சவுரதி 12 நாட்களுக்கு பிறகு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக மல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.